twitter
    Find out what I'm doing, Follow Me :)

விநாயக சதூர்த்தி மக்கள்(?) விழா

 
            வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், எனது பதிவுகளை படித்து பின்னுட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். தங்கள் பதிவுகளை படித்து வந்தாலும் பின்னுட்டமிட முடியாமைக்கு வருந்துகிறேன்


             நண்பர் தமிழன்  அவர்களுக்கு எனது நன்றிகள் அவர் எனக்கு முதன் முதலாக ஒரு விருதினை அளித்திருக்கிறார். நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை என்றாலும் அவரது அன்பிற்காக ஏற்று கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 


             இப்பதிவை படிப்பவர்களுக்கு  ஒன்றை கூற விரும்புகிறேன். நான் முழு கடவுள் பக்தி கொண்டவன். இப்பதிவு உண்மையிலேயே கடவுள் மீது பக்தி கொண்டவர்களை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல


             விநாயக சதூர்த்தி விழா தமிழ்நாட்டுக்கு வந்து ( இந்து இயக்கங்களால் கொண்டாடப்படும் ) இந்த ஆண்டோடு 19 ஆண்டுகளாகிவிட்டன. மக்களால் பக்தியோடு கொண்டாடப்படும் இவ்விழா தற்போது இந்து இயக்கங்களால் முஸ்லிம் இனத்தவருக்கு எதிராக கொண்டாடப்படும் ஒரு விழாவாக்கப்பட்டுவிட்டது.


            வருடா  வருடம்  காவல் துறையினரால் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு பாதுகாப்பளிக்கபடும் ஒரு விழா இந்த விநாயக சதூர்த்தி விழா. விழா வின் ஒரு பகுதியான விசர்ஜன ஊர்வலம் செல்லும் பாதையில் ஒரு  பள்ளிவாசல் கூட இல்லையெனில் ஊர்வல பாதையை மாற்ற வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பர். சரியாக பள்ளி வாசல் அருகில் வந்தவுடன் அதிர வைக்கும் கோஷங்கள், மேள தாளங்கள் என அரை மணி நேரமாவது அந்த இடத்தில் விநாயகரை வைத்து கொண்டாடவில்லை என்றால் இந்து இயக்கங்களுக்கு தூக்கம் வராது.


              சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் இத்தனை வருடங்கள் நடந்த விநாயகர் சதூத்தி ஊர்வலத்தில் காவல் துறை தடை விதித்திருப்பதால் ஒரு முறை கூட ஐஸ் அவுஸ் பகுதியை தாண்டியதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு இது ஒரு பொழுது போக்கு மட்டுமே உண்மையான உணர்வுள்ளவர்கள் ஊர்வலம் நடத்த எவ்விதமாவது முயற்சி செய்து தடையை நீக்க முயற்சி செய்திருப்பார்கள். வழக்கம் போல இந்து முண்ணனி தலைவர் இராம. கோபாலன் தடையை மீற முயற்ச்சிக்க வழக்கம்: போல கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்படுவார். இன்று வரை அது தான் நடந்து வருகிறது. கைது செய்தால் ஐந்து வருடம் சிறை தண்டணை என்றால் ஒருவர் கூட தடையை மீறி ஊர்வலம் செல்ல மாட்டார்கள்.


                           இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதெல்லாம் பழங்கதை தற்போது விநாயகர் சிலை 5 அடி முதல் 18 அடி  வரை வைக்கப்படுகிறது. முதலில் விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டு வந்ததால் அவ் விநாயர்கள் சிலையை கொண்டு போய் ஆற்றிலோ அல்லது கடலிலே போட்டால் மட்டும் போதும் அது தானாக கரைந்து விடும் தற்போது நடப்பது என்ன அனைத்து விநாயகர் சிலைகளும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ்ஸில் செய்யபடுகிறது அதை உடைக்க அந்த இயக்கத் தொண்டர்கள் செய்யும் காரியம் விநாயகர் நேரில் கண்டால் கண்ணீர் வி்ட்டிருப்பார்.



                            திருப்பூரில் இவ்வருடம் பரபரப்பிற்காக ஈழ விநாயகர் சிலை வைப்பதாக இந்து இயக்கங்களால் செய்தி பரப்பட்டுவிட  காவல் துறைக்கு இன்னும் தூக்கம் தொலைந்து போனது. ஈழ மக்களின் நல்வாழ்வுக்காக இச் சிலைகள் வைக்கப்படுவதாக இந்து இயக்கங்கள் கூறினாலும், இது வரை இந்து இயக்கங்கள் ஈழ மக்களுக்காக செய்தது என்ன. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி ஆளியாற்றிலும், அவினாசி அருகேவும் ஈழ தமிழர் நிவாரண முகாம்கள் உள்ளன. இது வரை அங்குள்ள மக்களுக்கு ஒரு வேளை உணவளித்திருப்பார்களா ?



                            முழுக்க  முழுக்க இந்து இயக்கங்களால் பப்ளிசிட்டி காக கொண்டாடபடும் விழாவாக விநாயக சதூர்த்தி மாறி விட்டது. நான் பார்த்த சில சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் பின்னால் உட்கார்ந்து மது அருந்தும் கொடுமையும் நடந்தது.

                             கடந்த முன்று நாட்களாக மொத்தம் 363 சிலைகள் இந்து இயக்கங்ககள்ளால் வைக்கப்பட்டது. காவல் நிலையத்தில் இருந்த போலிஸார் 32 பேர் மட்டுமே ( மற்ற பணிகள் போக ) இவர்கள் அனைவரும் கடந்த முன்று நாட்களாக தூங்கவும் இல்லை. நான் இப்பதிவை எழதும் இந்நாளில் (25.08.09) மதியம் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.



                              ஊர்வலத்தில் 13 வயது பையன் முதல் அனைவரும் புல் போதை விநாயகருக்கு பூஜை செய்தவர் வரை கடந்த வருடங்கள் சென்ற ஊர்வலபாதையிலேயே இவ்வருடமும் நடைபெற்றது. ஒரு குறிப்பிட்ட பள்ளி வாசல் அருகில் வரும் போது அங்கிருந்த முஸ்லீ்ம்கள் தங்கள் பள்ளிவாசல் அருகே ஊர்வலம் வருவதை தடுக்க இந்து இயக்ககளை சேர்ந்தவர்கள் அங்கேயே சாலை மறியல் செய்ய ஆரம்பித்தனர். காவல் துறையினர் எவ்வளவு கேட்டு கொண்டும் இருதரப்பினரும் ஒத்து போகவில்லை.


                            இந்நிலையில் பள்ளிவாசலில் இருந்து ஒரு கல் காவல் துறையினரது மீது வீசப்பட காவல் துறையை சேர்ந்த பலருக்கும் காயம். உடனடியாக  லத்தி சார்ஜ் செய்ய கூட்டம் கலைந்து ஊர்வலம் தொடர்ந்து நடந்தது. இந்நிலையில் நகரத்தின் பல பகுதிகளில் கல் வீச்சு, வாகன உடைப்பு என தற்போது பதட்டமாகவே உள்ளது.

                              இந்நிலைக்கு யார் காரணம் இரு தரப்பினருக்கும் இடையே கலகம் ஏற்படுத்தி அதில் குளிர் காயும் மதத் தலைவர்கள் மட்டுமெ காரணம். ஒன்றை நினைத்து பாருங்கள் பள்ளி வாசலில் எதற்கு கற்கள் ? ஆக முஸ்லீம்களும் ஒரு வித எதிர்ப்பு மனப்பான்மையிலேயே இருந்து வந்திருக்கிறார்கள். வருடம் ஒரு நாள் இந்துக்களால் நடத்தப்படும் விழா சரி ஊர்வலம் போகட்டும் என்ற மனப்பான்மை அவர்களுக்கு இருந்திருந்தால் இப்பிரச்சினையே வந்திருக்காது.



                                உங்கள் அனைவருக்குமே முஸ்லீம் இன நண்பர்கள் உண்டு இது வரை அவர்களை யாராவது எதிரியாக நினைத்து பார்த்திருக்கிறீர்களா. பார்க்கவும் மாட்டீர்கள் பார்க்கவும் முடியாது. இதே போலவே முஸ்லீம் நண்பர்களும்.....

                                விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகோதரத்துவமும் இருந்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரும் அவ்வாறு இல்லையெனில் இப்பிரச்சினை ஒரு நீ்ங்காத ஒரு பிரச்சினையாக மட்டுமே இருக்கும்.


                      தினமலரில் ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. சுட்டி இது போன்ற நிகழ்வுகளால் மட்டுமே இரு மதத்தினருக்கும் ஒன்றுமை ஏற்படுமே தவிர மதத்தலைவர்களின் பேச்சுக்களை கேட்டு செயல்பட்டால்..... ரஜினி சொன்ன மாதிரி "தமிழ் நாட்ட அந்த ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது. "



நன்றி மீண்டு்ம் ஒரு பதிவில் சந்திக்கிறேன்..........

                       





ஆர்பரிக்கும் ஜாதியமும், அடிவாங்கும் அரசு பேருந்துகளும்

                       மறுபடியும் ஒரு பேருந்து அனுபவம். கடந்த ஆண்டு எனது திருமணம் முடித்து முதல் வருட திருவிழாவிற்காக எனது மனைவியின் ஊருக்கு இதே ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி சென்ற போது நடந்தவைதான் இப்பதிவில் ......................

                     மாத இறுதி என்பதால் இரண்டு நாட்களாக வேலை பளுவின் காரணமாக தூங்காமல் வேலை முடித்து லீவு வாங்கி பஸ் ஏறதுக்குள்ள கண்ணுள்ள தண்ணி வந்துடுச்சு. சரி பஸ் ஏறலாம்ன்னு பஸ் ஸ்டாணட் போன திருவிழா கூட்டம். சரி படிக்கட்டுலயாவது  இடம் கிடச்சுதேன்னு டிக்கெட் எடுத்துட்டு படிக்கட்டுலயே  உக்காந்து மதுரை வந்து சேர்ந்தேன். தூக்கமும் இல்ல ( படிகெட்டுல உட்கார்ந்து தூங்குனா சொந்த செலவுல நமக்கு டிகெட் கெடச்சுரும். )

                       அது என்னவோ தெரியல கோயமுத்தூருக்கும், திருப்பூருக்கும்  ( சுமார் 55 கி.மி. ) 15 ருபாய் டிக்கெட்  ஆனா 6கி.மி. ல இருக்கற மாட்டுதாவணிக்கும் ஆரப்பாளையத்துக்கும் 10 ருபாய் டிக்கெட் கேட்டா நைட் சர்வீஸ்ஸாம். அது என்னடா கவுர்மண்டு பஸ் நைட் மட்டும் மைலேஜ் கம்மியா கொடுக்குதோ நினைச்சுக்கிட்டு மாட்டு தாவணி வந்த சேர்ந்தேன்.

                       மாட்டுதாவணி பேருந்து நிலையம், ஆசியாவின் இரண்டாவது மிக பெரிய பேருந்து நிலையம் ( முதல்ல எதுன்னு தெரியல ). எப்பவும் மதுரை வந்தா மல்லிகைப்பூ, ஸ்வீட் எல்லாம் வீட்டுக்கு வாங்கிட்டு போவேன். அப்படியே புதுபட சிடியும்...........

                     தமிழ்நாட்டுல வேற எங்கயும் பாக்க முடியாது. நேத்து ரிலீசான படம் இன்னைக்கு கடையில முன்னாடி டிஸ்பிளே ல இருக்கும். ஒரு நாள் விளையாட்டா கேட்டேன். " இங்க ரெய்டடெல்லாம் கிடையாதான்னு ' கடைக்காரர் சிரிச்சுக்கிட்டே " அண்ணாச்சி கடையில படத்த பாருங்க " பாத்தேன். மதுரை துணை மேயரும், தற்போதைய எம்.பி. யும் சிரிச்சுக்கிட்டு கடை ஓனர் கூட நின்னுகிட்டு இருக்கற மாதிரி பெரிய போட்டோ. நடவடிக்கை எடுத்துட்டு நம்ம போலீஸ் அங்க வேலை பாத்திர முடியுமா ? சத்தமில்லாமல் கிளம்பி கடைசி பிளாட்பாரத்துக்கு ( அப்புறம் தென் மாவட்டம் எப்பவும் கடைசிதானே )  வந்து பார்த்தால் அங்கயும் கூட்டம்.

                        ஒரே ஒரு ஏஸி பேருந்து அதுவும் நான் வழக்கமாய் வரும் பேருந்து உள்ள வரும்போதே என்னை கண்ட கண்டக்டர் கையசைத்தார் அப்பாடா ஒரு வழியாய் சீட் உறுதி என்று நினைத்துக் கொண்டு பேருந்தில் ஏறினேன். நல்ல வேளை ஒரே ஒரு சீட் இருந்தது. டிகெட் எடுத்துவிட்டு படுத்து தூங்கினவன்தான். காலை ஒரு 0530 மணியிருக்கும் முழிப்பு வந்து மணியை பார்த்தேன். ஒரு சிமெண்ட் லாரியின் பின்புறம் பஸ் போய் கொண்டிருந்தது.

                        நல்லா விடிஞ்சு பேருந்தினுள் வெளிச்சம் இருக்க எந்திரிச்சு பாத்தா மணி 0830 முன்னாடி பாத்தா அதே  சிமெண்ட் லாரி..............இன்னுமாடா சிமெண்ட் லாரி பின்னாடி பஸ் போயிட்டு இருக்குன்னு பாத்தா பஸ் நின்று கொண்டிருந்தது. சரி ஏதோ பிரச்சினை என்று இறங்கி வந்து கண்டக்டரை கேட்டால் அவர் " அவர் வாங்க சார் இப்பதான் முழிச்சீங்களா பஸ் காலை ல 0500 மணியிலருந்து இங்கதான் நிக்கிது வாங்க நீங்களும் ஜோதில ஐக்கியமாகுங்க"  என்றார்.

                      பேருந்து நின்ற இடம் மதுரையை அடுத்த எலியார்பத்தி என்ற கிராமம் அங்கிருந்த ஒரு சாதியை சேர்ந்த(?) மன்னரின் பிளக்ஸ் போர்டுக்கு (?) யாரோ விஷமிகள் செருப்பு மாலை அணிவித்து விட அதனால் அங்கு மட்டுமல்ல திருச்சி வரை சாலை மறியல் என்ற தெரிந்து கொண்டேன்.

                       சிகரெட் ஒன்றை பற்றவைத்துக் கொண்டு ( இந்த கருமத்த மட்டும் விட முடியல யாராவது ஐடியா சொல்லுங்க ) நடப்பதை வேடிககை பார்க்க தொடங்கினேன். ஐந்து வயது பொடியன் முதல் நாளன்னிக்கு சாயந்தரம் 0645 மணிக்கு முச்சுவிட மறக்கற பெரிசு வரை கையில் தடியென்ன ! கற்களென்ன ! ஒரு டி.வி.எஸ் ல அஞ்சு போரத அன்னக்குதான் பார்த்தேன்.

                      சாலை மறியலில் ஈடுபட்டிருந்த கூட்டம் ஆக்ரோஷமாக இருந்தது. ஒருத்தன் " மாப்ள கலெக்டர வரச் சொல்லு"  இன்னொருத்தன் " கலெக்டர் என்னடா வெண்ணை சி.எம். வரச்சொல்லி சொல்லுடா " இன்னொருத்தன் இங்கயே இந்த பிளக்ஸ் போர்டுக்கு பதிலா வெங்கல சிலை (?) வைக்கற வரைக்கும் பஸ் ஓடாது பாத்துபுடுறோம் நாமாளா அவனான்னு "  இங்க நின்னு சிரிச்சா நமக்கு டின்னு கட்டிடுவாங்கன்னு தள்ளி வந்து நின்னுகிட்டேன்.

                     இதுல கண்டக்டர் புலம்பல் வேற ஏன்னா லாரிகாரர் வண்டியை நிழல்ல நிறுத்துறன்னு கொண்டு போய் ஒதுக்குபுறமா நிறுத்திட்டார். நம்ம பஸ்தான் முன்னாடி நிக்கிறது. கல்லெடுத்து எறிஞ்சான்னா முதல்ல நம்ம பஸ்சுக்குத்தான் திறப்பு விழா.

                      அப்போது ஒரு பெண் பிறந்து ஏழு மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் எங்கள் பேருந்து  அருகில் வந்து கண்டக்டரிடம் வெயிலின் தாக்கத்தால் குழந்தை அழுவதாகவும் ஒரு சீட் கிடைதாலும் போதும் என்று கேட்க கண்டக்டர் பேருந்தினுள் சென்று அமர்ந்திருந்தவர்களை பார்த்து கேட்க யாரும் சீட் கொடுக்க முன்வர வில்லை. ( வண்டியில் ஏஸி ஓடிக் கொண்டிருந்தது. ) பின் வெளியே தம் அடித்து கொண்டிருந்த என்னிடம் கேட்க நான் சரி உட்கார சொல்லுங்கள் நான் டிரைவர் கேபினில் உட்கார்ந்து கொள்கிறேன். என்று சொல்லிவிட்டேன்.

                    பெண்கள் பொறுமையிழந்தவர்களாக சாலை மறியலில் ஈடுபட்டிருந்த கூட்டத்திடம் சென்று " குந்தைகள் பாலுக்காகவும், உணவுக்காகவும் அழுகிறது உங்கள் போராட்டத்தை நிறுத்த கூடாதா எனக் கேட்க அங்கு இருந்தவர்கள் " உங்கள் குழந்தை பாலுக்கு செத்தா எங்களுக்கு என்ன ? எங்களுக்கு ஒரு தீர்வு வர்ற வரைக்கும் இந்த பிரச்சினையை விடமாட்டோம் என்று சொல்ல இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ் ஏற்படவே உடனே காவல் துறையினர் அங்கிருந்து பேருந்து பயணிகளை அப்புறப்படுத்தினர்.

                       அப்புறம் திட்டு எங்களுக்குதான். பாருய்யா உட்கார்ந்து போராட்டம் பண்றவங்கள தடுக்க வக்கில்ல ? எங்களை தடுக்க வந்துட்டாங்க ?  இவனுங்களுக்கெல்லாம் எதுக்கு காக்கி உடுப்பு அவுத்து போட்டு சேலையை கட்ட வேண்டியதுதானே ? இன்னும் நான் சொல்ல முடியாத வார்த்தைகள்.

                       பிறகு அற்கிருந்த காவலரிடம் என்ன சார் ஒரு லத்தி சார்ஜ் பண்ணி கலைக்கறத விட்டுட்டு இன்னும் பாத்துட்டு இருக்கிறீங்களேன்னு கேட்க அவரோ " சார் இங்க ஒரு இடத்தில மட்டுமில்ல திருச்சி வரைக்கும் சுமார் இருபது இடத்தில சாலை மறியல் பண்றாங்க எங்கயும் ஸ்ட்ரென்த் இல்ல இப்பதான் ஒவ்வொரு இடத்துக்கா போட்டுட்டு இருக்காங்க. எல்லா இடத்துலயும் போட்டு முடிச்ச பின்னாடி ஒரெ டைம்ல லத்தி சார்ஜ் பண்ணாதான் சேதம் அதிகமில்லாம இருக்கும் இங்க மடடும் பண்ணா அடுத்த நிமிஷம் தகவல் பரவி இருபது இடத்துலயும் பேருந்துகளை தாக்க ஆரம்பிச்சுருவாங்க அதனாலதான் வெயிட் பண்ணீட்டு இருக்கோம் என்றார்.

                  அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது மணி 0200 இன்னும் 20 நிமிஷத்துல டி.எஸ்.பி. வந்துவிடுவார் என்றும் லத்தி சார்ஜ் கொடுத்து விடுவார் என்றும் அவர் சொல்லவே நான் கண்டக்டரிடம்  சென்று பஸ்ஐ ரெடியா வச்சுருங்க என்று சொல்ல டிரைவர் அவர் சீட்டில் உட்கார்ந்து தயாராகிவிட்டார். மற்ற பேருந்துகள் எல்லாம் நிழலுக்காக மரத்தினடியில் நிறுத்தியிருந்தனர்.

                    அங்கிருந்து ஒரு போலீஸ் வேன் வர இங்கிருந்த காவலர்கள் தயாராகினர். டி.எஸ்.பி. வந்து இறங்கினார். இறங்கி ஒரே ஒரு கல் எடுத்து கூட்டத்தினுள் விட அடுத்த நிமிடம் போலீசார் மீது கல் வந்து விழ லத்தி சார்ஜ் செய்ய ஆரம்பித்தனர். முதலில் எங்கள் பேருந்து நின்றதால் போலீசார் எங்கள் பேருந்து வழி ஏற்படுத்தி கொடுக்க, எங்கிருந்தோ ஒரு செங்கல் பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடியில் மோதி உடைந்தது. கண்ணாடி உடையவில்லை. கண்ணாடியின் விலை 16000 ருபாய்களாம் எளிதில் உடையாது என்று கண்டக்டர் சொன்னார். அடுத்த கிராமங்களில் காவல் துறையினர் கலவர கும்பல விரட்டி அடித்திருந்தனர். எங்களுபின் வந்த வாகனங்கள் அனைத்தும் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன.

                       உடைக்கபட்டிருந்த பேருந்துகள் அவ்வழியாக தினமும் எத்தனை முறை போயிருக்கும், எத்தனை முதியோர்கள் அப்பேருந்தில் வைத்தியத்திற்காகவும், தனது மகள் பேரப்பிள்ளை பார்க்க எத்தனை முறை பயணித்திருப்பார், பெண்கள் படிப்பிற்காகவும் வேலைக்காகவும் எத்தனை முறை பயணித்திருப்பார், மாணவ மாணவியர் கல்விக்காக எத்தனை முறை பயணித்திருப்பார், எத்தனை இளைஞர் இளைஞிகளின் காதல் அப்பேருந்தது பயணத்தில் ஏற்பட்டிருக்கும்.

                        ஊருக்குள் ஒரு பிரச்சினை என்றால் போதும் உடனே பேருந்தை நிறுத்த வேண்டும். அல்லது உடைக்க வேண்டும். முதுகெலும்பில்லாதன் செய்கின்றவன் செயல் அது. தன் இயலாமையை மறைக்க குடிகாரன் தன் மனைவி குழந்தைகளை அடிப்பது போல்..... ஏன் தண்ணி போட்டால் அவ்வூரில் உள்ள ஒரு ரவுடியை அடிக்க சொல்லுங்கள். மறு நாளே திவசம்தான்.

                           நீ எதிர்பை காட்டுகிறாயா உன் வீட்டை கொளுத்து. உன் உடமைகளை கொளுத்து. பொது சொத்தை அழிக்க உனக்கு எவன் தைரியம் கொடுத்தது. வேற யார் அரசாங்கம் தான். இன்றை எதிர் கட்சி நாளைய ஆளும் கட்சி. வழக்காவது மண்ணாவது. ஏதோ ரெண்டு பஸ்ஸ எரிச்சா மந்திரியாகலாம்கிறதுதான் இன்றைய நிலையாக இருக்கும் போது நாம் என்ன சொல்ல முடியும் .............

மறுபடியும் சந்திக்கிறேன்.

பேருந்தில் தொலைதூர பயணமா ? உஷார்

                   எனக்கு நானே வச்ச ஆப்பை நானே எடுக்கறதுக்குள்ள கண்ணுல தண்ணி வந்துடுச்சு. ( முந்தின பதிவை படிச்சவங்களுக்கு தெரியும்) அந்த பிரச்சினை ஒரு வழியா முடிஞ்சது. மனசு சரியில்லாததால வலைப்பக்கமும் வர முடியல. வலைப்பூவை படித்து பின்னுட்மிட்டவர்களுக்கு எனது நன்றிகள்.

                    கடந்த ஒரு மாதத்தில் என்னுடைய மகளுக்கு மொட்டை மற்றும் மருமகளுக்கு மொட்டை என்று சுமார் 6 முறை எனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்ததால் இப்பதிவு.

                    முதல் முறை சென்ற போது எனக்கு முன்னிருக்கையில் ஒரு கல்லூரி மாணவர் தனது லேப்டாப் மற்றும் தனது உடைகள் அடங்கிய பையுடன் வந்தார்.  வண்டி கோவையில் இருந்து இரவு 0900 மணிக்கு கிளம்பியது ஏஸி பஸ் என்பதால் சிறிது நேரத்திலேயே துக்கம் வந்து விட்டது. நன்றாக நான் தூங்கி விட்டேன். சுமார் 1200 மணியிருக்கும் வண்டியில் ஏஸி அதிகமாயிருக்க தூக்கம் வராமல் எழுந்து டிரைவர் கேபின் போய் தம் அடித்து விட்டு வரலாம் போய் டிரைவர் கேபினில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். ( அடிக்கடி அப்பேருந்தில் சென்று வருவதால் கண்டக்டரும் டிரைவரும் நல்ல பழக்கம் ) வண்டி பரவையை தாண்டி சென்று கொண்டிருந்தது. பஸ் பாத்திமா காலேஜ் அருகில் வரும் போது ஒருவன் தான் இறங்க வேண்டும் என்று கூற பஸ்ஐ நிறுத்தினார் டிரைவர் அவனும் இறங்கி போய்விட்டான்.

               பின் டிரைவருடன் பேசி கொண்டிருந்த போது அவன் அருப்புக் கோட்டைக்கு டிக்கெட் எடுத்ததாகவும் ஆனால் மதுரையிலேயே இறங்கி விட்டான் என்று சொன்ன போதே எனக்கு சந்தேகம் டிரைவரிடம் கேட்ட போது இல்ல சார் அவன் கொண்டு வந்த பையத்தான் கொண்டு போறான் என்றார். பஸ் மாட்டு தாவணியை நெருங்க அந்த கல்லூரி மாணவர் படபடப் போடு கண்டக்டரிடம் வந்து "சார் யாராவது என் முன் சீட்ல இருந்தவர் எங்கே இறங்கினார் " என்று கேட்க கண்டக்டர் அவன் பாத்திமா காலேஜ் அருகி்ல் இறங்கியதை சொன்னார்.

                 " சார் என்னோட லேப்டாப்ப காணோம் " என்று அந்த கல்லூரி மாணவன் சொன்ன போது என்னுடைய சந்தேகம் உறுதியானது. இவனிடம் லேப்டாப் உள்ளதை கவனித்து அதே பேருந்தில் அவனுடன் பயணித்திருக்கிறான். கல்லூரி மாணவன் உறங்கிய நெரத்தில் அவன் பையில் உள்ள லேப்டாப்பை தனது பைக்கு மாற்றி எடுத்து சென்றிருக்கிறான். அந்த கல்லூரி மாணவன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு  படிப்பதாகவும் தன் பெற்றோர்கள் தன்னை சிரமபட்டு படிக்க வைப்பதாகவும் கண்ணணீருடன் கூற சரி முடிந்த வரை முயற்சி செய்வோம் என்று  நானும் அக் கல்லூரி மாணவனும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலேயே இறங்கி கொண்டோம்.

                          அக் கல்லூரி மாணவனை பேருந்து நிலையத்திலேயே இருக்க சொல்லி லேப்டாப்பை எடுத்து சென்றவன் . கோவையை சேர்ந்தவனாக இருந்தால் மறுபடியும் கோவை செல்ல இங்கே வரலாம் என்று சொல்லி அக் கல்லூரி மாணவனை அங்கே அமர வைத்து விட்டு மதுரையில் உள்ள என்னுடை நண்பணை வரவழைத்து அவனுடைய வாகனத்திலேயே ஆரப்பாளையத்திலிருந்து மீண்டும் பரவை வரை சென்றேன் ஆளை காணோம். அங்கேயே மீண்டும் ஒரு தம் அடித்து வீட்டு மீண்டும் திரும்பிவர பாத்திமா காலேஜ் அருகே லேப்டாப்பை  அடித்தவன் நின்று கொண்டிருந்தான்.




                            என்னை பார்த்தால் ஓடிவிடுவான். என்று என் நண்பனுக்கு விஷயம் தெரியும் என்பதால் நான் நடந்து வருகிறேன். நீ அவனிடம் சென்று அட்ரஸ் கேள் முடிந்தால் பிடி என்று சொல்ல நண்பன் அருகில் சென்று விசாரிப்பது போல் விசாரித்து அவன் எதிர்பாராத நேரத்தில் அவன் நகராதபடி பிடித்து கொண்டான் பின் நானும் பிடித்து கொண்டு நாலு போடு போடவே தான் லேப்டாப் திருடியதை  அவன் ஒப்பு கொண்டான்.

                              பின்னர் அவனை ஆரப்பாளையம் புறக்காவல் நிலையம் கொண்டு சென்று அவனை ஒப்படைத்தோம். அங்கிருந்த தலைமை காவலர்  அவன் மீது வழக்கு பதிவு செய்ய அக் கல்லூரி மாணவனை புகார் எழுதி தரச் சொன்ன போது இடை மறித்த நான் " ஏட்டையா நீங்க சொல்றது சரிதான் எப்படியும் இவனுக்கு தண்டணை கிடைக்கும் ஆனா இந்த பையனேட படிப்பை நினைச்சு பாருங்க கேஸ் எப்படியு்ம் முணு வருசத்துக்கு நடக்கும் எத்தனை வாய்தா ? எத்தனை சாட்சிகள்  இந்த பையனுக்கு இரண்டு சம்மன் அல்லது முணு சம்மன் அனுப்புவாங்க அந்த டைம்ல அவனுக்கு செமஸ்டர் இருக்கலாம் கோர்ட்டில் ஆஜராக முடியாம போகலாம் ஆஜராகலன்னா வாரண்ட்தான். இது அவனுக்கு பைனல் இயர் வேலை கிடைச்சு வெளிநாடு போக கூட தடையாகலாம் அதனால இவனுக்கு வேற ஸ்டேசன்ல ஏதாவது கேஸ் இருந்தா அத கேட்டு போடுங்க என்று சொல்லி அவனுடைய லேப்டாப்பை வாங்கி கொடுத்து விட்டு என்னுடைய மொபைல் எண்ணையும் அந்த ஏட்டையாவிடம் கொடுத்து விட்டு வந்தேன்.இப்போது அந்த கல்லூரி மாணவன் எனக்கு ஒரு நண்பன்.


                  கவனத்தில் கொள்ளுங்கள் 
  1. பெரும்பாலும் ஏஸி வகை பேருந்துகளியே இவ்வகையாக திருட்டுக்கள் நடக்கிறது. ( நடுத்தர மற்றும் உயர்தட்டு மக்கள் பயணிப்பதால், விலையுயர்ந்த பொருட்கள் கிடைப்பதால் )
  2. ஏஸி ஓடுவதால் பேருந்தின் இயக்கத்தை நிறுத்துவதில்லை. நமக்கும் பேருந்து ஓடும் உணர்வே இருப்பதால் ஆழ் தூக்கத்தில் இருக்கும் நமக்கு விழிப்பு வருவதில்லை ( திருடனுக்கு வசதி ) 
  3. இரயிலில் பயணம் செய்யும் போது பயன் படுத்து  பெட்டிகளுக்கான சங்கிலி பூட்டை பயன்படுத்துங்கள்.
  4. பேருந்தில் ஓடும் திரைப்படத்தில் உள்ள கண் உங்கள் பொருட்களிலும் இருக்கட்டும்

அடுத்து ஒரு பேருந்து அனுபவத்தில் சந்திக்கிறேன்.

featured-content