twitter
    Find out what I'm doing, Follow Me :)

ஆர்பரிக்கும் ஜாதியமும், அடிவாங்கும் அரசு பேருந்துகளும்

                       மறுபடியும் ஒரு பேருந்து அனுபவம். கடந்த ஆண்டு எனது திருமணம் முடித்து முதல் வருட திருவிழாவிற்காக எனது மனைவியின் ஊருக்கு இதே ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி சென்ற போது நடந்தவைதான் இப்பதிவில் ......................

                     மாத இறுதி என்பதால் இரண்டு நாட்களாக வேலை பளுவின் காரணமாக தூங்காமல் வேலை முடித்து லீவு வாங்கி பஸ் ஏறதுக்குள்ள கண்ணுள்ள தண்ணி வந்துடுச்சு. சரி பஸ் ஏறலாம்ன்னு பஸ் ஸ்டாணட் போன திருவிழா கூட்டம். சரி படிக்கட்டுலயாவது  இடம் கிடச்சுதேன்னு டிக்கெட் எடுத்துட்டு படிக்கட்டுலயே  உக்காந்து மதுரை வந்து சேர்ந்தேன். தூக்கமும் இல்ல ( படிகெட்டுல உட்கார்ந்து தூங்குனா சொந்த செலவுல நமக்கு டிகெட் கெடச்சுரும். )

                       அது என்னவோ தெரியல கோயமுத்தூருக்கும், திருப்பூருக்கும்  ( சுமார் 55 கி.மி. ) 15 ருபாய் டிக்கெட்  ஆனா 6கி.மி. ல இருக்கற மாட்டுதாவணிக்கும் ஆரப்பாளையத்துக்கும் 10 ருபாய் டிக்கெட் கேட்டா நைட் சர்வீஸ்ஸாம். அது என்னடா கவுர்மண்டு பஸ் நைட் மட்டும் மைலேஜ் கம்மியா கொடுக்குதோ நினைச்சுக்கிட்டு மாட்டு தாவணி வந்த சேர்ந்தேன்.

                       மாட்டுதாவணி பேருந்து நிலையம், ஆசியாவின் இரண்டாவது மிக பெரிய பேருந்து நிலையம் ( முதல்ல எதுன்னு தெரியல ). எப்பவும் மதுரை வந்தா மல்லிகைப்பூ, ஸ்வீட் எல்லாம் வீட்டுக்கு வாங்கிட்டு போவேன். அப்படியே புதுபட சிடியும்...........

                     தமிழ்நாட்டுல வேற எங்கயும் பாக்க முடியாது. நேத்து ரிலீசான படம் இன்னைக்கு கடையில முன்னாடி டிஸ்பிளே ல இருக்கும். ஒரு நாள் விளையாட்டா கேட்டேன். " இங்க ரெய்டடெல்லாம் கிடையாதான்னு ' கடைக்காரர் சிரிச்சுக்கிட்டே " அண்ணாச்சி கடையில படத்த பாருங்க " பாத்தேன். மதுரை துணை மேயரும், தற்போதைய எம்.பி. யும் சிரிச்சுக்கிட்டு கடை ஓனர் கூட நின்னுகிட்டு இருக்கற மாதிரி பெரிய போட்டோ. நடவடிக்கை எடுத்துட்டு நம்ம போலீஸ் அங்க வேலை பாத்திர முடியுமா ? சத்தமில்லாமல் கிளம்பி கடைசி பிளாட்பாரத்துக்கு ( அப்புறம் தென் மாவட்டம் எப்பவும் கடைசிதானே )  வந்து பார்த்தால் அங்கயும் கூட்டம்.

                        ஒரே ஒரு ஏஸி பேருந்து அதுவும் நான் வழக்கமாய் வரும் பேருந்து உள்ள வரும்போதே என்னை கண்ட கண்டக்டர் கையசைத்தார் அப்பாடா ஒரு வழியாய் சீட் உறுதி என்று நினைத்துக் கொண்டு பேருந்தில் ஏறினேன். நல்ல வேளை ஒரே ஒரு சீட் இருந்தது. டிகெட் எடுத்துவிட்டு படுத்து தூங்கினவன்தான். காலை ஒரு 0530 மணியிருக்கும் முழிப்பு வந்து மணியை பார்த்தேன். ஒரு சிமெண்ட் லாரியின் பின்புறம் பஸ் போய் கொண்டிருந்தது.

                        நல்லா விடிஞ்சு பேருந்தினுள் வெளிச்சம் இருக்க எந்திரிச்சு பாத்தா மணி 0830 முன்னாடி பாத்தா அதே  சிமெண்ட் லாரி..............இன்னுமாடா சிமெண்ட் லாரி பின்னாடி பஸ் போயிட்டு இருக்குன்னு பாத்தா பஸ் நின்று கொண்டிருந்தது. சரி ஏதோ பிரச்சினை என்று இறங்கி வந்து கண்டக்டரை கேட்டால் அவர் " அவர் வாங்க சார் இப்பதான் முழிச்சீங்களா பஸ் காலை ல 0500 மணியிலருந்து இங்கதான் நிக்கிது வாங்க நீங்களும் ஜோதில ஐக்கியமாகுங்க"  என்றார்.

                      பேருந்து நின்ற இடம் மதுரையை அடுத்த எலியார்பத்தி என்ற கிராமம் அங்கிருந்த ஒரு சாதியை சேர்ந்த(?) மன்னரின் பிளக்ஸ் போர்டுக்கு (?) யாரோ விஷமிகள் செருப்பு மாலை அணிவித்து விட அதனால் அங்கு மட்டுமல்ல திருச்சி வரை சாலை மறியல் என்ற தெரிந்து கொண்டேன்.

                       சிகரெட் ஒன்றை பற்றவைத்துக் கொண்டு ( இந்த கருமத்த மட்டும் விட முடியல யாராவது ஐடியா சொல்லுங்க ) நடப்பதை வேடிககை பார்க்க தொடங்கினேன். ஐந்து வயது பொடியன் முதல் நாளன்னிக்கு சாயந்தரம் 0645 மணிக்கு முச்சுவிட மறக்கற பெரிசு வரை கையில் தடியென்ன ! கற்களென்ன ! ஒரு டி.வி.எஸ் ல அஞ்சு போரத அன்னக்குதான் பார்த்தேன்.

                      சாலை மறியலில் ஈடுபட்டிருந்த கூட்டம் ஆக்ரோஷமாக இருந்தது. ஒருத்தன் " மாப்ள கலெக்டர வரச் சொல்லு"  இன்னொருத்தன் " கலெக்டர் என்னடா வெண்ணை சி.எம். வரச்சொல்லி சொல்லுடா " இன்னொருத்தன் இங்கயே இந்த பிளக்ஸ் போர்டுக்கு பதிலா வெங்கல சிலை (?) வைக்கற வரைக்கும் பஸ் ஓடாது பாத்துபுடுறோம் நாமாளா அவனான்னு "  இங்க நின்னு சிரிச்சா நமக்கு டின்னு கட்டிடுவாங்கன்னு தள்ளி வந்து நின்னுகிட்டேன்.

                     இதுல கண்டக்டர் புலம்பல் வேற ஏன்னா லாரிகாரர் வண்டியை நிழல்ல நிறுத்துறன்னு கொண்டு போய் ஒதுக்குபுறமா நிறுத்திட்டார். நம்ம பஸ்தான் முன்னாடி நிக்கிறது. கல்லெடுத்து எறிஞ்சான்னா முதல்ல நம்ம பஸ்சுக்குத்தான் திறப்பு விழா.

                      அப்போது ஒரு பெண் பிறந்து ஏழு மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் எங்கள் பேருந்து  அருகில் வந்து கண்டக்டரிடம் வெயிலின் தாக்கத்தால் குழந்தை அழுவதாகவும் ஒரு சீட் கிடைதாலும் போதும் என்று கேட்க கண்டக்டர் பேருந்தினுள் சென்று அமர்ந்திருந்தவர்களை பார்த்து கேட்க யாரும் சீட் கொடுக்க முன்வர வில்லை. ( வண்டியில் ஏஸி ஓடிக் கொண்டிருந்தது. ) பின் வெளியே தம் அடித்து கொண்டிருந்த என்னிடம் கேட்க நான் சரி உட்கார சொல்லுங்கள் நான் டிரைவர் கேபினில் உட்கார்ந்து கொள்கிறேன். என்று சொல்லிவிட்டேன்.

                    பெண்கள் பொறுமையிழந்தவர்களாக சாலை மறியலில் ஈடுபட்டிருந்த கூட்டத்திடம் சென்று " குந்தைகள் பாலுக்காகவும், உணவுக்காகவும் அழுகிறது உங்கள் போராட்டத்தை நிறுத்த கூடாதா எனக் கேட்க அங்கு இருந்தவர்கள் " உங்கள் குழந்தை பாலுக்கு செத்தா எங்களுக்கு என்ன ? எங்களுக்கு ஒரு தீர்வு வர்ற வரைக்கும் இந்த பிரச்சினையை விடமாட்டோம் என்று சொல்ல இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ் ஏற்படவே உடனே காவல் துறையினர் அங்கிருந்து பேருந்து பயணிகளை அப்புறப்படுத்தினர்.

                       அப்புறம் திட்டு எங்களுக்குதான். பாருய்யா உட்கார்ந்து போராட்டம் பண்றவங்கள தடுக்க வக்கில்ல ? எங்களை தடுக்க வந்துட்டாங்க ?  இவனுங்களுக்கெல்லாம் எதுக்கு காக்கி உடுப்பு அவுத்து போட்டு சேலையை கட்ட வேண்டியதுதானே ? இன்னும் நான் சொல்ல முடியாத வார்த்தைகள்.

                       பிறகு அற்கிருந்த காவலரிடம் என்ன சார் ஒரு லத்தி சார்ஜ் பண்ணி கலைக்கறத விட்டுட்டு இன்னும் பாத்துட்டு இருக்கிறீங்களேன்னு கேட்க அவரோ " சார் இங்க ஒரு இடத்தில மட்டுமில்ல திருச்சி வரைக்கும் சுமார் இருபது இடத்தில சாலை மறியல் பண்றாங்க எங்கயும் ஸ்ட்ரென்த் இல்ல இப்பதான் ஒவ்வொரு இடத்துக்கா போட்டுட்டு இருக்காங்க. எல்லா இடத்துலயும் போட்டு முடிச்ச பின்னாடி ஒரெ டைம்ல லத்தி சார்ஜ் பண்ணாதான் சேதம் அதிகமில்லாம இருக்கும் இங்க மடடும் பண்ணா அடுத்த நிமிஷம் தகவல் பரவி இருபது இடத்துலயும் பேருந்துகளை தாக்க ஆரம்பிச்சுருவாங்க அதனாலதான் வெயிட் பண்ணீட்டு இருக்கோம் என்றார்.

                  அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது மணி 0200 இன்னும் 20 நிமிஷத்துல டி.எஸ்.பி. வந்துவிடுவார் என்றும் லத்தி சார்ஜ் கொடுத்து விடுவார் என்றும் அவர் சொல்லவே நான் கண்டக்டரிடம்  சென்று பஸ்ஐ ரெடியா வச்சுருங்க என்று சொல்ல டிரைவர் அவர் சீட்டில் உட்கார்ந்து தயாராகிவிட்டார். மற்ற பேருந்துகள் எல்லாம் நிழலுக்காக மரத்தினடியில் நிறுத்தியிருந்தனர்.

                    அங்கிருந்து ஒரு போலீஸ் வேன் வர இங்கிருந்த காவலர்கள் தயாராகினர். டி.எஸ்.பி. வந்து இறங்கினார். இறங்கி ஒரே ஒரு கல் எடுத்து கூட்டத்தினுள் விட அடுத்த நிமிடம் போலீசார் மீது கல் வந்து விழ லத்தி சார்ஜ் செய்ய ஆரம்பித்தனர். முதலில் எங்கள் பேருந்து நின்றதால் போலீசார் எங்கள் பேருந்து வழி ஏற்படுத்தி கொடுக்க, எங்கிருந்தோ ஒரு செங்கல் பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடியில் மோதி உடைந்தது. கண்ணாடி உடையவில்லை. கண்ணாடியின் விலை 16000 ருபாய்களாம் எளிதில் உடையாது என்று கண்டக்டர் சொன்னார். அடுத்த கிராமங்களில் காவல் துறையினர் கலவர கும்பல விரட்டி அடித்திருந்தனர். எங்களுபின் வந்த வாகனங்கள் அனைத்தும் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன.

                       உடைக்கபட்டிருந்த பேருந்துகள் அவ்வழியாக தினமும் எத்தனை முறை போயிருக்கும், எத்தனை முதியோர்கள் அப்பேருந்தில் வைத்தியத்திற்காகவும், தனது மகள் பேரப்பிள்ளை பார்க்க எத்தனை முறை பயணித்திருப்பார், பெண்கள் படிப்பிற்காகவும் வேலைக்காகவும் எத்தனை முறை பயணித்திருப்பார், மாணவ மாணவியர் கல்விக்காக எத்தனை முறை பயணித்திருப்பார், எத்தனை இளைஞர் இளைஞிகளின் காதல் அப்பேருந்தது பயணத்தில் ஏற்பட்டிருக்கும்.

                        ஊருக்குள் ஒரு பிரச்சினை என்றால் போதும் உடனே பேருந்தை நிறுத்த வேண்டும். அல்லது உடைக்க வேண்டும். முதுகெலும்பில்லாதன் செய்கின்றவன் செயல் அது. தன் இயலாமையை மறைக்க குடிகாரன் தன் மனைவி குழந்தைகளை அடிப்பது போல்..... ஏன் தண்ணி போட்டால் அவ்வூரில் உள்ள ஒரு ரவுடியை அடிக்க சொல்லுங்கள். மறு நாளே திவசம்தான்.

                           நீ எதிர்பை காட்டுகிறாயா உன் வீட்டை கொளுத்து. உன் உடமைகளை கொளுத்து. பொது சொத்தை அழிக்க உனக்கு எவன் தைரியம் கொடுத்தது. வேற யார் அரசாங்கம் தான். இன்றை எதிர் கட்சி நாளைய ஆளும் கட்சி. வழக்காவது மண்ணாவது. ஏதோ ரெண்டு பஸ்ஸ எரிச்சா மந்திரியாகலாம்கிறதுதான் இன்றைய நிலையாக இருக்கும் போது நாம் என்ன சொல்ல முடியும் .............

மறுபடியும் சந்திக்கிறேன்.

featured-content